;
Athirady Tamil News

யாழில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

0
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க. சிவகரன்  தலைமையில் நேற்றைய தினம் (08.072026) மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாடு தொடர்பாக துரிதமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் கலந்து கலந்துரையாடுவதற்காக இக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆறு மாதங்களில் டெங்கு தாக்கம் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த முதலாம் திகதியில் இருந்து 7ஆம் திகதி வரை 65 ஆக அது உயர்ந்துள்ளதாகவும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அந்த வகையில் தொடர்ச்சியாக இதனை கட்டுப்பாட்டுகள் வைத்திருக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுவதாகவும் அதற்காக இந்த அவசர கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த வாரத்திற்கு முதல் வாரம் ஜனாதிபதி செயலகத்தினால் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் மூன்று நாள் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் கிராம அலுவலகங்களிலும் டெங்கு கட்டுப்பாட்டுவாரம் நடைமுறைப்படுத்தப்பட்டு அதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அதனை கட்டுப்படுத்துவதற்கும் அதனை கண்காணிப்பதற்கும் இக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

01. பிரதேச செயலாளர் தலைமையில் செயலக டெங்கு கட்டுப்பாட்டுக் கூட்டத்தை இந்த வாரம் / அடுத்த வாரத்துக்குள் நடாத்துமாறும் கிராம மட்ட டெங்கு கட்டுப்பாட்டு செயலணிக் கூட்டத்தை கிராம அலுவலர் தலைமையில் உடனடியாக நடாத்தப்பட்டு சிரமதானப்பணிகள் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

02. யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு வாரமாக இம் மாதம் – ஜூலை 13 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தி வீடுகள், பாடசாலைகள், தனியார், உயர்கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள், வணக்கஸ்தலங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் முழுமையாக சிரமதானப்பணி இடம்பெற வேண்டும் எனவும் அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

03. டெங்குக்கட்டுப்பாட்டுக்குழு ஜூலை 13ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதிக்குள் அதிக டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு திடீர் களப்பணி மேற்கொண்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

04. விழிப்புணர்வு வாரத்தினை இம் மாதம் – ஜூலை 13ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை நடாத்துவது எனவும், அந்தவகையில் ஜூலை 13ஆம் திகதி சகல வணக்கஸ்தலங்களிலும், 14ஆம் திகதி அரசாங்க அலுவலகங்களிலும், 15 ஆம் திகதி பாடசாலைகளிலும் தனியார், உயர்கல்வி நிறுவனங்களிலும் தீர்மானிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. வி.பி.எஸ்.டி.பத்திரண, யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன்,  தவிசாளர்கள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரிகள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை செயலாளர்கள், கடற்படை மற்றும் இராணுவ அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.