;
Athirady Tamil News

வெடிக்கும் வன்முறை; வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு – 4 பேர் பலி, 250 பேர் படுகாயம்!

0

மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்துள்ளது.

தீவிரமாகும் வன்முறை
உத்தராகண்ட் ஹல்த்வானியில் சட்டவிரோத மதரஸா மற்றும் அதன் அருகிலுள்ள மசூதி நீதிமன்ற உத்தரவின்பேரில் இடிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் குழுவினர் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதையொட்டி, ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். அப்போது ஹல்த்வானி, வான்புல்புரா பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அங்கு போலீஸாருக்கும், எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதிகாரிகள் மீது கல்வீச்சு நடந்தது.

ஊரடங்கு உத்தரவு
இதனால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி பதிலடி கொடுத்தனர். காவல் நிலையத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வன்முறை அதிகரித்து நிலைமை மோசமானது. பெண்கள் உள்பட ஆத்திரமடைந்த குடியிருப்புவாசிகள் வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில், 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், 2 பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். 250 பேர் படுகாயமடைந்தனர். கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர, இணையதள சேவை முடக்கப்பட்டதுடன், வன்முறையாளர்களை கண்டதும் சுடுவதற்கு உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் டாமி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து, ஹல்ட்வானியில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நைனிடால் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.