;
Athirady Tamil News

முகாமில் இராணுவ வீரர் உயிரிழப்பு! விசாரணையில் சிக்கிய நால்வர்

0

ஹொரண-தொம்பாகொட இராணுவ முகாமில் கடமையாற்றும் போது இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் நான்கு இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் அதே முகாமை சேர்ந்த 4 இராணுவத்தினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாக்குமூலங்கள்
நீதவான் விசாரணைகளின் போதும்,பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதும் முரண்பட்ட வாக்குமூலங்களை வழங்கியமையினால் குறித்த படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 4 இராணுவ வீரர்களும் ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 4 இராணுவத்தினருடன் உயிரிழந்த இராணுவ வீரர் முகாமில் மதுபான விருந்து நடத்தியுள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணை
பின்னர் இராணுவ முகாமில் உள்ள குளத்தில் நீராடும்போது நீரில் மூழ்கி குறித்த இராணுவ வீரர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அப்போது உயிரிழந்த இராணுவ வீரரின் கையடக்கத் தொலைபேசியை யாருக்கும் தெரியாமல் ஏனைய இராணுவ வீரர்கள் குளத்தில் வீசியிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குருவாதொட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.