;
Athirady Tamil News

ஐந்து மணித்தியால விசாரணையின் பின்னர் யாருக்கும் தெரியாமல் பின்வழியால் வெளியேறிய மைத்திரி

0

புதிய இணைப்பு
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஐந்து மணித்தியால விசாரணையின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பின்வாயில் வழியாக வெளியேறியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்றிருந்த நிலையில் விசாரணையின் பின்னர் வெளியேறியுள்ளார்.

இதன்படி, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு காலை 10.30 மணிக்கு வருகை தந்த மைத்திரிபால சிறிசேனவிடம் ஐந்து மணித்தியால விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால் சிறிசேன வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (25) அங்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

விசாரணைகள் முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதை தவிர்க்கும் வகையில் திணைக்களத்தின் பிரதான நுழைவாயில் இன்றி பிறிதொரு வாயில் வழியே வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.

முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் விசாரணைக்காக முன்னிலையாகியுள்ளார்.

குறித்த விசாரணை இன்றையதினம் (25.03.2024) காலை 10.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னால் உள்ள பிரதான சூத்திரதாரிகளை தனக்கு தெரியும் என கடந்த சில தினங்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தார்.

சிஐடி விசாரணைக்கு
இதனையடுத்து, அவர் மீது உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கமைய, இன்றையதினம் மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதனால், அப்பகுதியில் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் குவிந்துள்ளதோடு பொலிஸாரினால் பலத்த பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.