;
Athirady Tamil News

யுக்திய நடவடிக்கையின் எதிரொலி…வடக்கில் முதன்முறையாக முடக்கப்பட்ட கோடிரூபாய் சொத்துக்கள்!

0

காவல்துறை மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய தேடுதல் நடவடிக்கையின் கீழ் குற்றப்புலனாய்வு பிரிவினால் பணிக்கப்பட்ட விசாரணைக்கு அமைவாக சட்ட விரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு முன்னெடுத்த விசாரணையின் அடிப்படையில் சந்தேக நபர் ஒருவரின் 9 கோடியே 30 இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி இன்றைய தினம் (02) குற்றப்புலனாய்வு பிரிவின் சட்ட விரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினால் சொத்து முடக்கப்பட்டுள்ளது

மன்னார் (Mannar) தலைமன்னார் பகுதியை சேர்ந்த 43 வயதான சந்தேக நபர் ஒருவருக்குச் சொந்தமான இரண்டு வீடுகள்,சொகுசு வாகனம் உள்ளடங்கலாக 9 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களே மேற்படி நீதிமன்ற அனுமதியுடன் முடக்கப்பட்டுள்ளது.

சொத்துக்கள் முடக்கம்
குறித்த சந்தேக நபர் 2002 ஆம் ஆண்டு அரச வீட்டுத்திட்டம் ஒன்றை பெற்று இரண்டு படகுகளை வைத்து சாதரண குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில் 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் குறுகிய காலத்திற்குள் பல கோடி சொத்துக்களைச் சேர்த்துள்ளார்.

அதன் அடிப்படையில் குற்றப்புலனாய்வு பிரிவின் கீழ் இயங்கும் சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இன்று நீதிமன்ற அனுமதி பெறபட்டுள்ளது.

அதன்பிரகாரம், வவுனியா பிரதி காவல்துறை மா அதிபர் சாமந்த விஜசேகரவின் மேற்பார்வையின் கீழ் மன்னார் மாவட்ட காவல்துறை அத்தியட்சகர் சந்திரபாலவின் தலைமையில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் சட்ட விரோத விசாரணை பிரிவு காவல்துறையினரால் தற்காலிகமாக இன்றில் இருந்து 7 தினங்களுக்கு சந்தேக நபரின் சின்னக்கடையில் காணப்படும் கடைத்தொகுதியுடன் கூடிய வீடு ஒன்றும் தலைமன்னார் பகுதியில் உள்ள விசாலமான வீடும் சொகுசு வாகனம் ஒன்றும் முடக்கப்பட்டுள்ளது.

அரசுடமையாக்கும் செயற்பாடு
அதே நேரம் சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் சொத்துக்களை அரசுடமையாக்கும் செயற்பாட்டை மேற்கொள்ளும் நடவடிக்கையிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கில் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் முறை என்பதுடன் இது போன்று சட்டவிரோதமாக சொத்துக்கள் ஈட்டிய பல்வேறு நபர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.