;
Athirady Tamil News

பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு .

0

வடக்கு கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் மது போதைக்கு எதிரான இயக்கம் இன்று (05/05/2024) நடாத்திய விழிப்புணர்வுக் கருத்தரங்கின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மதுசாரம் மற்றும் போதைப்பொருள் பாவனையால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், சவால்களும் என்ற தொனிப்பொருளில் இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை ஒரு சவாலான விடயமாக காணப்படுவதாக இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவித்தார். போதைப்பொருள் பாவனையால் பெண்கள் அதிகளவில் சவால்களை எதிர்நோக்குவதாக தெரிவித்த கௌரவ ஆளுநர், இந்நிலையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். போதைபொருளுக்கு எதிரான பிரசாரங்களை செய்வதை விடுத்து, இளைஞர், யுவதிகளை மாற்று செயற்பாடுகளில் ஈடுபடுத்தி அவர்களின் திறன்களுக்கு களம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என கௌரவ ஆளுநர் தெரிவித்தார். இதற்காக தனது பணிப்புரைக்கு அமைய வடக்கு மாகாண விளையாட்டுத்துறை மற்றும் கலாசார திணைக்களம் ஆகியன இணைந்து கிராமிய மட்டத்தில் புதிய செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்படும் போது சிறந்த மாற்றங்களை எதிர்பார்க்க முடியும் எனவும் கௌரவ ஆளுநர் கூறினார். அதற்கமைய நிலையான பொருளாதாரத்தை பெற்றுக்கொள்வதற்கான புதிய திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார். அத்துடன் போதைப்பொருளானது குடும்பங்களின் அடிப்படையை சிதைத்துக் கொண்டிருக்கும் நிலையில் , அதற்கு எதிராக செயற்பட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.