பால் நிலைசார் வன்முறையினை பதிவு செய்யும் தரவுத் தளத்தினை கையாளவுள்ள உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு
பால் நிலைசார் வன்முறையினை பதிவு செய்யும் தரவுத் தளத்தினை கையாளவுள்ள உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (16.01.2025) மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர்,
பால்நிலைசார் வன்முறைகளை அதாவது குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற முறைப்பாடுகளை இத் தரவுத் தளத்தில் பதிவதற்கும் அதற்குரிய நடவடிக்கைகளை விரைவாக எடுப்பதற்கும், தடுப்பதற்கும் உத்தியோகத்தர்கள் பூரணமாக வினைத்திறனாக செயற்பட வேண்டும் எனவும், தொடர்பாடல் திறனுடனும் உணர்வு பூர்வமாகவும் செயற்பட்டு தரவுத் தளம் வெற்றியளிக்க ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொண்டார்.
வடமாகணத்தின் 05 மாவட்டங்களிலும் சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தின் அனுசரணையில் இச் செயற்றிட்டம் விரைவில் உத்தியோகபூர்வமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், வன்முறை பதிவு செய்யப்படும் இடத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு SMS மூலம் குறுந்தகவல் அனுப்பிவைப்பதற்கு ஏற்றவகையில் தரவுத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பொது மக்களும் இத் தரவுத் தளம் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடுகள் உள்ளது.
இச் செயலமர்வில் உதவி மாவட்டச் செயலாளர், சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலைய திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட பிரதேச பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள்.



