;
Athirady Tamil News

ட்ரம்பின் புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் நடவடிக்கை துவக்கம்… தயார் நிலையில் விமானங்கள்

0

அமெரிக்காவில் இருந்து சட்டவிரோத புலம்பெயர் மக்களை நாடுகடத்தும் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் நடவடிக்கை அமுலுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடுமையான விளைவுகள்
அத்துடன், மிக மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்ட புலம்பெயர்ந்தோரை கைது செய்யும் நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. வெள்ளைமாளிகை வெளியிட்டுள்ள புகைப்படங்களில், சட்டவிரோத புலம்பெயர் மக்கள் அமெரிக்க இராணுவ விமானத்தின் அருகே வரிசையாக காத்திருப்பது பதிவாகியுள்ளது.

ஜனாதிபதி ட்ரம்ப் முழு உலகிற்கும் ஒரு வலுவான மற்றும் தெளிவான செய்தியை பதிவு செய்துள்ளார். நீங்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ட்ரம்பின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் உத்தியோகப்பூர்வ சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார்.

டெக்சாஸின் எல் பாசோவில் உள்ள பிக்ஸ் ராணுவ விமானநிலையத்திலிருந்து குவாத்தமாலாவுக்கு ஒரு விமானம் புறப்பட்டது என ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.



5,000 பேர்கள் வரையில்

இதனிடையே, ட்ரம்பின் எல்லைக்கான பொறுப்பாளர் டாம் ஹோமன் தெரிவிக்கையில், ட்ரம்ப் நிர்வாகம் ஏற்கனவே 1,300 சட்டவிரோத புலம்பெயர் மக்களை கைது செய்துள்ளதாகவும், அவர்களில் 1,000 க்கும் மேற்பட்டோர் குற்றவாளிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்க விமானப்படை சட்டவிரோத புலம்பெயர் மக்களை வெளியேற்றும் பொருட்டு நான்கு விமானங்களை ஒதுக்கியுள்ளதாகவும், 5,000 பேர்கள் வரையில் இதனால் அப்புறப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை மட்டும் சட்டவிரோத புலம்பெயர் மக்கள் மற்றும் மோசமான குற்றவாளிகள் என 538 பேர்கள் கைது செய்யப்பட்டதாக ட்ரம்ப் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.