;
Athirady Tamil News

யாழில் நெற்செய்கை அழிவடையும் நிலை ; விவசாயிகள் கவலை

0

வடக்கில் கடந்த வருட இறுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள அபாய நிலை காரணமாக நெற்பயிர்ச்செய்கை பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது.

இது தொடர்பான விசேட பதிவே இது, யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணிப் பிரதேசத்தில் நாவற்காட்டுப் பகுதியில் உள்ள கிழக்கு வெளி என்று அழைக்கப் படுகின்ற வெளியோர வெங்கிராயன் வயல் வெளியே இதுவாகும்.

சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்புக்கொண்ட குறித்த வயல் வெளியில் நாவற்காடு, குடமியன், கரம்பைக்குறிச்சி, இடைக்குறிச்சி, இயற்றாலை,மாசேரி போன்ற பல பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் நெற்பயிர்ச் செய்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆரம்ப காலம் தொட்டு இந்த வயல் வெளியில் மேற்கொள்ளப்படுகின்ற நெற்செய்கை விவசாயிகளிக்கு பாரிய விளைச்சலை கொடுத்து வந்த நிலையில் அண்மைக் காலங்களாக வயல் வெளியில் வெள்ள நீர் தேங்குவதால் விளைச்சலில் பெரும் சரிவு ஏற்பட்டது இதனால் விவசாயிகள் தொடர்ச்சியாக பாதிப்படைந்து வருகின்றனர்.

நாவற்காடு, குடமியன், கரம்பைக்குறிச்சி, இயற்றாலை,மிருசுவில் போன்ற பல பகுதிகளிலிருந்து வெள்ள நீர் வடிந்தோடி இந்த வயல் வெளியில் விழுகின்றன.

பின்னர் அடி வாய்க்கால் என்று சொல்லப்படுகின்ற பாரிய வாய்க்கால் வழியாக கண்டல் பகுதிக்கு சென்று முள்ளிவெளி வழியாக யாக்கரு பகுதியை ஊடறுத்து அங்கிருந்து வல்லை வெளி வழியாக சென்று தொண்டைமானாறு ஊடாக கடலில் சங்கமிப்பது வழமை.

இந்த நிலையில் கடந்த வருடம் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட பின்னர் சீரற்ற காலநிலை காரணமாக அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தது.

இதனால் இந்த வயல் வெளியில் வெள்ள நீர் தேங்கியது. வாய்க்கால் வழியாகவும் வெள்ள நீர் வடிந்தோடாத காரணத்தால் நெற்செய்கை அழிவடையும் நிலையை எட்டியுள்ளதாகக் கோரி விவசாயிகளால் ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதையடுத்து அதிகாரிகளின் கவனதிற்கும் கொண்டு வரப்பட்டது. இவ்வாறான நிலையில் தற்போது அறுவடை காலப்பதி ஆகையால் விவசாயிகள் நெல் அறுவடையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த வயல் வெளியில் மேற்கொள்ளப்பட்ட நெற் செய்கை முற்றாக அழிவடைந்து உள்ளதாகவும் இதனால் தாம் பெரும் பாதிப்படைந்துள்ளதாகவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.