வயிற்றுக்குத்து: துன்னாலையில் 3 வயதுக் குழந்தை மரணம் உடற்கூற்று மாதிரி கொழும்புக்கு அனுப்பி வைப்பு

வயிற்றுக்குத்துக் காரணமாக துன்னாலையில் 3 வயது ஆண் குழந்தை ஒன்று நேற்று மரணமடைந்துள்ளது.
துன்னாலை தெற்கு குடவத்தையைச் சேர்ந்த விதுசாந்தன் துஷாத் (வயது-3) என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.
கடந்த மாதம் 28ஆம் திகதி குழந்தைக்கு வயிற்றோட்டம் ஏற்பட்ட நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறப்பட்டுள்ளது.
பின்னர் வயிற்றுக்குத்து 4ஆம் திகதி ஏற்பட்டு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பின்னர் புதன்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று வியாழக்கிழமை இரவு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.
மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.