;
Athirady Tamil News

லாகூரில் அடுத்தடுத்து டிரோன் தாக்குதல்? பாகிஸ்தானில் உச்சகட்ட பதற்றம்!

0

லாகூர் விமான நிலையம் அருகே அடுத்தடுத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, லாகூர் விமான நிலையம் மூடப்படுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் கிழக்கு நகரமான லாகூரில் உள்ள வால்டன் விமான நிலையத்திற்கு அருகில் வியாழக்கிழமை காலை டிரோன் தாக்குதல் நடந்ததாக ஜியோ டிவி செய்தி வெளியிட்டுள்ளது.

கோபால் நகர் மற்றும் நசீராபாத் சுற்றுப்புறங்களில் வெடிசப்தத்துடன் புகைமூட்டம் கிளம்பும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவ் தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில், லாகூர் விமான நிலையம் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

லாகூரில் நடத்தப்பட்டிருப்பது டிரோன் தாக்குதலா? இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்டதா? என்ற செய்திகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக இருதரப்பில் இருந்தும் உறுதி செய்யப்படவில்லை.

இந்தியா தாக்குதல்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இயங்கி வந்த ஒன்பது பயங்கரவாத முகாம்களை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இந்திய ராணுவம் தாக்கி அழித்துள்ளது.

இதில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் உள்பட 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் தாக்குதலுக்கு தக்க பதிலடி தரப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.