உ.பி.யில் பிரம்மோஸ் ஏவுகணை தொழிற்சாலை: ராஜ்நாத் சிங் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்

உ.பி.யில் பிரம்மோஸ் ஏவுகணை தொழிற்சாலையை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொடங்கி வைத்தார். அங்கு ஆண்டுக்கு சுமார் 100 ஏவுகணைகள் தயாராகும் என கூறப்படுகிறது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். இந்த அதிநவீன மையமானது உ.பி.யின் பாதுகாப்பு தொழில் துறை வழித்தடத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது. இது லக்னோ, கான்பூர், அலிகர், ஆக்ரா, ஜான்சி மற்றும் சித்ரகூட் ஆகிய 6 முக்கிய முனைகளைக் கொண்டுள்ளது.
லக்னோவில் நிறுவப்பட்டுள்ள இந்த மையத்தில் சூப்பர்சோனிக் பிரம்மோஸ் க்ரூஸ் ஏவுகணைகள் அசெம்பிள் செய்யப்பட்டு சோதனை செய்யப்படும். மேலும் அங்கு இலகுவான, அடுத்த தலைமுறை ஏவுகணைகளும் தயாரிக்கப்படும். இது, நாட்டின் தரை, வான் மற்றும் கடல் வழியாக சென்று துல்லிய தாக்குதல் திறன்களை அதிகரிக்கும்.
பிரம்மோஸ் என்பது தரை, கடல் மற்றும் வான் பரப்பிலிருந்து ஏவக்கூடிய, துல்லியமாக தாக்கக்கூடிய ஏவுகணை ஆகும். இது பகல், இரவு மற்றும் அனைத்து வானிலை சூழலிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்கு நிறுவப்பட்டுள்ள தொழிற்சாலை ஆண்டுக்கு 80 முதல் 100 பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரிக்கும் திறன் கொண்டது. இது வருங்காலத்தில் 100 முதல் 150 ஏவுகணைகள் வரை தயாரிக்கும் வகையில் மேம்படுத்தப்படும்.
இந்தியாவின் டிஆர்டிஓ மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சியில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இந்த ஏவுகணையை வடிவமைத்தது.
80 ஹெக்டேர் நிலப்பரப்பில் ரூ.300 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள இந்த தொழிற்சாலையில் தயாராகும் ஏவுகணைகள், 290 முதல் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை, மணிக்கு 3,430 கி.மீ. வேகத்தில் சென்று தாக்கும் திறன் வாய்ந்தவை ஆகும்.
அடுத்த தலைமுறை பிரம்மோஸ் ஏவுகணைகள் வெறும் 1,290 கிலோ எடை கொண்டதாக இருக்கும். இது முந்தைய ஏவுகணையின் 2,900 கிலோ எடையை விட குறைவு. இதனால், சுகோய் சு-30எம்கேஐ போர் விமானத்தில் 3 ஏவுகணையை சுமந்து செல்ல முடியும்.
இந்த தொழிற்சாலைக்கு கடந்த 2021-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. மூன்றரை ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.