சீன பொருள்கள் மீதான வரி 145 சதவீதத்திலிருந்து 30% ஆக குறைப்பு! – அமெரிக்கா

ஜெனீவா: சீன பொருள்கள் மீதான வரி 145 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக அமெரிக்கா அறிவிக்க உள்ளது.
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் 2-ஆவது முறையாக பதவியேற்றுக்கொண்ட டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருள்களுக்கு உலக நாடுகள் விதித்துள்ள அதிக வரியைக் குறைக்க அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். அதன்படி, எதிர்வினை நடவடிக்கையாக எந்தெந்த நாடுகள் அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதித்துள்ளதோ அதற்கேற்ப அந்தந்த நாட்டு பொருள்களுக்கும் அமெரிக்கா வரியை உயர்த்துவதாக அறிவித்தார்.
அந்த வகையில், சீனா மீதான வரியை அதிகபட்சமாக 145 சதவீதம் வரை உயா்த்தினாா்.
சீனாவும் அமெரிக்க பொருள்களுக்கு 125 சதவீத இறக்குமதி வரி விதித்து பதிலடி கொடுத்தது. இந்த அதிக வரி வதிப்பால், கடந்த ஆண்டு 66,000 கோடி டாலரை எட்டிய அமெரிக்கா-சீனா இருதரப்பு வா்த்தகம் முற்றிலுமாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளன. இவ்விரு நாடுகளுக்குமிடையில் ஏற்பட்டுள்ள உடன்படிக்கையின்படி, சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி 145 சதவீதம் என்ற அளவிலிருந்து 30 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பு மே 14-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
அதேபோல, சீன அரசு அமெரிக்க பொருள்களுக்கு விதித்திருந்த 125 சதவீத வரியை 10 சதவீதமாகக் குறைத்து அறிவிக்க உள்ளது.
அமெரிக்கா – சீனா வா்த்தக மோதலுக்கு தீா்வு காணும் நோக்கில் ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான ஸ்விட்சா்லாந்து நாட்டு தூதரகத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.