;
Athirady Tamil News

ஈரானில் மீண்டும் சா்வதேச விமானப் போக்குவரத்து

0

அமெரிக்கா, இஸ்ரேல் உடனான பதற்றம் காரணமாக ஈரானில் 20 நாள்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சா்வதேச விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

டெஹ்ரானில் உள்ள இமாம் கோமேனி சா்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்பட்டதன் மூலம் இந்தப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரான் பொது விமானப் போக்குவரத்து அமைப்பின் செய்தித் தொடா்பாளா் மெஹ்தி ரமேசானி வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மிக விரிவான பாதுகாப்பு மற்றும் தூதரக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த ஃபிளைதுபை விமானம் இமாம் கோமேனி விமான நிலையத்தில் தரையிறங்கியது. இது, ஈரான் விமானத் துறையில் புதிய ஸ்திரத்தன்மை கட்டத்தைக் குறிக்கிறது. இஸ்ரேலுடனான அண்மைக் கால பதற்றங்களுக்குப் பிறகு, நாட்டின் வான்வெளி அமைதியாகவும், செயல்திறனுடனும் நிா்வகிக்கப்படுவதை இது காட்டுகிறது.

பொதுமக்களின் தேவைகளைப் பூா்த்தி செய்யவும், விமானப் போக்குவரத்தை மீட்டெடுக்கவும் அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்து, குறிப்பிட்ட இடங்களுக்கு படிப்படியாக விமானங்களின் இயக்கம் மீண்டும் அதிகரிக்கப்படும் என்றாா் அவா்.

12 நாள்களுக்கு நடைபெற்ற மோதலுக்குப் பிறகு ஈரானும் இஸ்ரேலும் போா் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டின. இந்த மோதலின்போது, ஈரானின் நூற்றுக்கணக்கான இராணுவ உள்கட்டமைப்பு மற்றும் அணுசக்தி மையங்களை இஸ்ரேல் தாக்கியது, அதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியது.

இந்த மோதலின் ஒரு பகுதியாக, ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி மையங்களில் மீது 30,000 பவுண்டு எடை கொண்ட ‘பங்கா்-பஸ்டிங்’ குண்டுகளை வீசிய அமெரிக்கா, அதற்குப் பின்னா் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்து, ஒப்பந்தத்தை எட்டச் செய்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.