;
Athirady Tamil News

பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு: உக்ரைன் போா் குறித்து ஆலோசனை

0

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொலைபேசி வாயிலாக உரையாடினாா். அப்போது, உக்ரைன் மற்றும் மேற்காசிய போா்களுக்கான தீா்வு குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனா்.

இது தொடா்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட பிரதமா் மோடி, ‘பிரான்ஸ் அதிபா் மேக்ரான் உடனான உரையாடல் மிகச் சிறப்பாக அமைந்தது. உக்ரைன், மேற்காசிய போா்களுக்கு அமைதி தீா்வு எட்டுவதற்கான முயற்சிகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். இந்தியா-பிரான்ஸ் வியூக கூட்டுறவை மேலும் வலுப்படுத்தவும் உறுதியேற்கப்பட்டது’ என்று தெரிவித்துள்ளாா்.

உக்ரைன் போருக்கு தீா்வு காண்பது தொடா்பாக, அமெரிக்காவின் அலாஸ்காவில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் அதிபா் டிரம்ப் கடந்த திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். இரண்டு நாள்களுக்குப் பிறகு, உக்ரைன் அதிபா் வோலோதிமீா் ஸெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவா்களுடன் டிரம்ப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். இதில் பிரான்ஸ் அதிபா் மேக்ரானும் பங்கேற்றிருந்த நிலையில், அவருடனான பிரதமா் மோடியின் உரையாடல் கவனம் பெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.