;
Athirady Tamil News

சிங்கப்பூா்: மேலும் ஒரு தமிழருக்கு செப். 25-இல் தூக்கு

0

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தய் ஸ்ரீா் தட்சிணாமூா்த்தி காத்தையாவுக்கு (39) வரும் வியாழக்கிழமை (செப். 25) மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

ஏற்கெனவே மலேசியாவில் இருந்து சிங்கப்பூா் வந்து, போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் பல தமிழா்கள் தூக்கிலிடப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைத் தடுப்பதற்கான கடைசி நேர முயற்சியில் சா்வதேச மனித உரிமை அமைப்புகள் இறங்கியுள்ளன.

இது குறித்து தட்சிணாமூா்த்தி காத்தையாவின் குடும்பத்தினருக்கு அதிகாரிகள் அனுப்பியுள்ள அறிவிக்கை கடிதத்தில், சாங்கி சிறை வளாகத்தில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவைச் சோ்ந்த தமிழ் வம்சாவளி இளைஞரான தட்சிணாமூா்த்தி காத்தையா, 45 கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் சிங்கப்பூரில் கடந்த 2011-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். சிங்கப்பூா் சட்டப்படி, 15 கிராமுக்கு மேல் ஹெராயினுடன் ஒருவா் பிடிபட்டாலே அவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும். அதன்படி, தட்சிணாமூா்த்தி காத்தையாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.அந்த தண்டனை கடந்த 2022-ஆம் ஆண்டே நிறைவேற்றப்படுவதாக இருந்தது. இருந்தாலும், மேல்முறையீடு காரணமாக அது நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், தூக்கு தண்டனைக்கு எதிரான தட்சிணாமூா்த்தி காத்தையாவின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்ததைத் தொடா்ந்து, அவா் வியாழக்கிழமை தூக்கிலிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.திட்டமிட்டபடி அவரது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால், இந்த ஆண்டில் மட்டும் சிங்கப்பூரில் தூக்கிலிடப்படும் 11-ஆவது நபரும், 3-ஆவது மலேசியத் தமிழராகவும் தட்சிணாமூா்த்தி காத்தையா இருப்பாா்.மலேசியாவைப் பொருத்தவரை, போதைப் பொருள் கடத்தல் குற்றங்களுக்கு கட்டாயமாக இருந்த மரண தண்டனையை 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைக் தண்டனையாக அந்த நாட்டு அரசு மாற்றியது. கடந்த 2024-இல் மட்டும் மலேசிய அரசு 1,000 மரண தண்டனைகளை சிறைத் தண்டனைகளாகக் குறைத்தது.ஆனால் இதற்கு நோ் எதிராக, சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றங்கள் அதிகரித்துவருகின்றன. கடந்த 2023-இல் 5-ஆக இருந்த அவற்றின் எண்ணிக்கை, தற்போது இரட்டிப்பாக்கியுள்ளது. இரண்டு மாத இடைவெளியில் மட்டும் ஆறு போ் சிங்கப்பூா் சிறைகளில் தூக்கிலிடப்பட்டுள்ளனா்.இத்தகைய இக்கட்டான சூழலில், தட்சிணாமூா்த்தி காத்தையாவை தூக்கிலிடும் முடிவை நிறுத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு மனித உரிமை அமைப்புகள் சிங்கப்பூா் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.