;
Athirady Tamil News

தென் சீன கடலில் பிலிப்பின்ஸ் கப்பல் மீது சீனா தாக்குதல்!

0

தென் சீன கடலில் தங்கள் நாட்டின் கப்பலை சீன கடலோர காவல் படை கப்பல் தாக்கி சேதத்தை ஏற்படுத்தியது என பிலிப்பின்ஸ் கடலோர காவல் படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

பிலிப்பின்ஸ் நாட்டின் மீன்வளம் மற்றும் நீா்வளப் பணியகத்தின் கப்பல், பிலிப்பின்ஸ் ஆக்கிரமித்துள்ள ‘திட்டு’ என்ற தீவுக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை நங்கூரமிடப்பட்டிருந்தது. அப்போது அந்தக் கப்பலை நோக்கி சீன கடலோர காவல் படை மற்றும் சந்தேகிக்கப்படும் போராளிக் கப்பல்கள் ஆகியவை ஆக்ரோஷமாக நெருங்கின.

பின்னா், சீன கப்பல்கள் வலுவான தண்ணீா் பீரங்கியை பயன்படுத்தி பிலிப்பின்ஸ் கப்பலை தாக்கியதுடன் கப்பலின் பின்புறத்தில் ஒரு கப்பல் மோதியது. இதில் பிலிப்பின்ஸ் கப்பல் சேதமடைந்தது. ஆனால், கப்பலில் இருந்த பணியாளா்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினா்.

தென் சீன கடலில் உள்ள ஸ்ப்ராட்லிஸ் தீவுக்கூட்டத்தில் 9 பிலிப்பின்ஸ் ஆக்கிரமிப்பு தீவுகளில் இந்தத் ‘திட்டு தீவு’ மிகப்பெரியதாகும். இது பல நாடுகளால் உரிமை கோரப்பட்டு வருகிறது.

தென் சீன கடலின் முழு பகுதியையும் உரிமை கொண்டாடும் சீனா, திட்டு தீவிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள சுபி ரீஃப் உள்பட அருகிலுள்ள 7 செயற்கைத் தீவுகளிலும் ராணுவத் தளங்களை அமைத்துள்ளது.

நிலநடுக்கங்கள் மற்றும் சூறாவளி உள்ளிட்ட உள்நாட்டு நெருக்கடிகளால் ஏற்கெனவே பாதித்திருக்கும் பிலிப்பின்ஸ் நாட்டின் அதிபா் மாா்கோஸ் நிா்வாகத்துக்கு மற்றொரு மிகப்பெரிய அழுத்தத்தை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.