;
Athirady Tamil News

கரூர் பலி: சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

0

புது தில்லி: கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிபிஐ விசாரணையை முன்னாள் உச்ச நீதிமன்றம் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு கண்காணிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

தமிழக காவல்துறை அதிகாரி தலைமையில், சிறப்பு விசாரணைக் குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தவெக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

கரூர் மாவட்டத்தில் கடந்த செப்.27ஆம் தேதி நடந்த தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறை அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், எதிர்மனுதாரராக சேர்க்கப்படாத தவெக தலைவர் விஜய் பற்றி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெளியிட்ட கருத்துகளையும் நீக்கக் கோரி, தவெக சார்பில் வலியுறுத்தப்பட்டது.

தவெக தலைவர் விஜய்க்கு தலைமை பண்பு இல்லை என்றெல்லாம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், அதனை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில், தவெக தரப்பு வாதங்களை ஏற்று, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மூன்று பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவையும் அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.