மின்கம்பி அறுந்து விழுந்ததில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பஸ் – 2 பேர் பலி
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜெப்பூரில் நேற்று காலை ஆம்னி பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 15க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
அந்த பஸ்சின் மேற்கூரையில் அதிக அளவிலான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், பஸ் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது தாழ்வாக சென்ற மின்கம்பி அறுந்து பஸ்சின் மீது விழுந்தது. இதில் பஸ் முழுவதும் உடனடியாக தீப்பற்றியது. தீ மளமளவென பரவியநிலையில் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தியுள்ளார்.
இதையடுத்து பயணிகள் அனைவரும் பஸ்சில் இருந்து கீழே இறங்க முயற்சித்தனர். ஆனாலும், தீ மளமளவென பரவியதால் பஸ்சில் இருந்த 2 பேர் தீயில் சிக்கி உடல்கருகி உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பஸ்சின் மேற்கூரையில் இருந்த கியாஸ் சிலிண்டர், எரிபொருள் போன்றவை தீ வேகமாக காரணம் என தெரியவந்துள்ளது.