வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை
பிரித்தானியாவில் கத்திக்குத்து சம்பவத்தில் இருந்து பலரை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு சுயநினைவு திரும்பியுள்ளது.
வன்முறையில் ஈடுபட்ட நபர்
லண்டன் வடகிழக்கு ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர் சமீர் ஜிடோனி. இவர் டான்காஸ்டரில் இருந்து லண்டன் கிங்ஸ் கிராஸுக்கு செல்லும் ரயிலில் பணியில் இருந்தபோது, வெறிபிடித்த நபர் ஒருவர் வன்முறையில் ஈடுபட்டதைப் பார்த்துள்ளார்.

அந்நபர் கத்தியைக் கொண்டு பயணிகள் மீது தாக்குதல் நடத்தியபோது, ஜிடோனி துணிச்சலாக செயல்பட்டு அவரைத் தடுத்து பலரை காப்பாற்றினார்.
ஆனால், அவர் பலமுறை குத்தப்பட்டு உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் சேர்த்து காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நபர் கத்தியை காட்டிக்கொண்டே, ரயில் தண்டவாளத்தைக் கடந்து வேலியைத் தாண்டிச் சென்று பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சுயநினைவு திரும்பியுள்ளது
அந்தோணி வில்லியம்ஸ் என்ற 32 வயது நபர் மீது சனிக்கிழமையன்று, லண்டனில் உள்ள மற்றொரு ரயிலில் கத்தியால் குத்தியதாகவும், 10 கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
டிசம்பர் 1ஆம் திகதி, கேம்பிரிட்ஜ் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் வரை அவர் காவலில் வைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. வியாழக்கிழமை அன்று ஜிடோனிக்கு சுயநினைவு திரும்பியுள்ளது. அவர் தனது மனைவியிடம் பேசியுள்ளார்.
இதனை பகிர்ந்த அவரது மனைவி எலெனி, இது உண்மையிலேயே ஒரு நேர்மறையான முன்னேற்றமாகும். இருப்பினும் அவரது மீட்சியில் இன்னும் நீண்ட பயணம் உள்ளது. அவர் மனிதநேயத்தில் ஆழமாக நம்பிக்கை கொண்ட ஒரு கனிவான மற்றும் தைரியமான நபர் என்று தெரிவித்தார்.