டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம்: உலகத் தலைவர்கள் கண்டனம்
இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியிலுள்ள செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ள நிலையில், ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு உலகத் தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
உலகத் தலைவர்கள் கண்டனம்
குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மலேசிய பிரதமரான அன்வர் இப்ராஹிம் வெளியிட்டுள்ள செய்தியில், டெல்லி செங்கோட்டை அருகே பல உயிர்களை பலிவாங்கியதுடன் ஏராளமானோர் காயமடையவும் காரணமாக இருந்த குண்டு வெடிப்பு குறித்து அறிந்த தான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும் தனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளதுடன், சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரான லின் ஜியான், உயிரிழந்தவர்களுக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
அத்துடன், காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டுள்ளார் அவர்.
பங்களாதேஷின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இந்த தாக்குதல் ஏற்றுக்கொள்ள இயலாதது என்றும், தீவிரவாத செயல்களுக்கு இந்த நாகரீக உலகில் இடம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
மாலத்தீவு ஜனாதிபதியான Mohamed Muizzu, செங்கோட்டை அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பு குறித்து அறிந்து ஆழ்ந்த துயரமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
இலங்கை வெளியுறவு அமைச்சரான Vijitha Herath, டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து கேள்விப்பட்டு கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், இந்திய மக்களுடன் ஒன்றிணைந்து நிற்பதாகவும் தெரிவித்துள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
இந்தியாவுக்கான சிங்கப்பூர் உயர் ஸ்தானிகரான Simon Wong, இஸ்ரேல் தூதரான Reuven Azar ஆகியோருடன், இந்தியாவிலுள்ள ஈரான் தூதரகமும் செங்கோட்டை குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ளனர்.