;
Athirady Tamil News

நைஜீரியாவில் விடுதியிலிருந்து 25 பள்ளி மாணவிகள் கடத்தல்!

0

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில், பள்ளிக்கூடத்தின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவில், ஏராளமான ஆயுதக்குழுக்கள் அரசுக்கு எதிரான தாக்குதல்கள், கடத்தல்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதில், சில குழுக்கள் அங்குள்ள வெளிநாட்டினரை, பள்ளிக்குழந்தைகளைக் கடத்தி பணப்பறிப்பிலும் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கெப்பி மாநிலத்தில் செயல்பட்டு வரும் உயர்நிலைப் பள்ளியின் விடுதியில் இருந்து நேற்று (நவ. 17) அதிகாலை சுமார் 25 மாணவிகளை ஆயுதம் ஏந்திய குழுவினர் கடத்தி சென்றுள்ளனர். அப்போது, பள்ளிக்கூடத்தின் மீது தாக்குதல் நடத்திய கடத்தல்காரர்கள் அங்குள்ள பாதுகாவலரை சுட்டுக்கொன்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கடத்தல்காரர்களால் ஆசிரியர் ஒருவரும் கொல்லப்பட்டதாக, உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். இந்தக் கடத்தல்களுக்கு நைஜீரியாவில் செயல்பட்டு வரும் போகோ ஹராம் உள்ளிட்ட எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இந்த நிலையில், சம்பவயிடத்துக்கு விரைந்த நைஜீரிய பாதுகாப்புப் படையினர் அருகிலுள்ள காடுகள் உள்ளிட்ட பதுங்குமிடங்களில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, நைஜீரியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு போகோ ஹராம் பயங்கரவாதிகளால் 276 பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டனர்.

அதன்பின்னர், பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்களால் 1,500-க்கும் அதிகமான மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், பெரும்பாலான மாணவர்கள் இதுவரை மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.