நைஜீரியாவில் சிறைப்பிடிக்கப்பட்ட மாணவர்களில் 50 பேர் தப்பினர்
நைஜீரியாவின் வட-மத்திய நைஜீரியாவில் உள்ள கத்தோலிக்க உறைவிடப் பள்ளியில் இருந்து கடத்தப்பட்ட 303 பள்ளி மாணவர்களில் 50 பேர் தப்பித்து தங்கள் குடும்பங்களுடன் இருப்பதாக பள்ளி நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
10 முதல் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை வரை தனித்தனியாக தப்பிச் சென்றதாக நைஜீரியாவின் கிறிஸ்தவ சங்கத்தின் தலைவரும் பள்ளியின் உரிமையாளருமான புனித புலஸ் தௌவா யோஹன்னா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தம் 253 பள்ளி மாணவர்களும் 12 ஆசிரியர்களும் இன்னும் கடத்தல்காரர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் ஆயுதக் குழுவினா் மற்றும் பயங்கரவாதிகளால் மாணவ மாணவிகள் பிணைத் தொகைக்காக கடத்திச் செல்லப்படும் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்றுவருகின்றன.
கடந்த 2014-ஆம் ஆண்டில் சிபோக் நகரில் இருந்து 276 பள்ளி மாணவிகளை போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றது உலகளவில் அதிா்வலையை ஏற்படுத்தியது. அந்த மாணவிகளில் ஏராளமானவா்கள் விடுவிக்கப்பட்டாலும், 80 பேரது நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லை.
அந்தக் கடத்தலுக்குப் பிறகு நைஜீரியாவில் இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கடத்தப்பட்டுள்ளனா்.