;
Athirady Tamil News

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம்; தேரருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

0

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையொன்றை வைத்தமை தொடர்பாக பலாங்கொட கஸ்ஸப தேரரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் இன்று (24) அழைப்பாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கஸ்ஸப தேரருக்கு திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.என்.எம்.சன்சுதீன் அழைப்பாணை உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

தேரரின் வதிவிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை
திருகோணமலையில் ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விகாரைக்குச் சொந்தமான காணியில் புத்தர் சிலையை நிறுவச் சென்றபோது நடைபெற்ற குழப்பமான சூழல் தொடர்பாக பொலிசாரிடம் வாக்குமூலம் வழங்குவதற்கு பலாங்கொட கஸ்ஸப தேர் மறுத்துள்ளதாக மன்றில் பொலிசார் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

நீதிமன்றத்தில் பி அறிக்கையை சமர்ப்பித்துள்ள பொலிசார், கடந்த 16ஆம் திகதி ஏற்பட்ட குழப்பத்தின் பின்னர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரரிடம் வாக்குமூலம் பெற முயற்சித்ததாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கை தண்டனைச் சட்டத்தின் பிரிவு 184 இன் கீழ் இது தண்டனைக்குரிய குற்றம் என்றும், விசாரணைகளுக்கு ஒத்துழைப்பது அனைத்து குடிமக்களின் கடமை என்றும் பொலிசார் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் ஒரு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்காததால் தேரருக்கு எதிராக அழைப்பாணை அனுப்புமாறு நீதிமன்றத்திடம் பொலிசார் கோரிக்கை விடுத்தனர்.

பலாங்கொட கஸ்ஸப தேரரின் தற்போதைய வதிவிடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தேரர் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசி இலக்கத்திற்கான பகுப்பாய்வு அறிக்கையை வழங்குமாறு தனியார் தொலைபேசி நிறுவனத்தின் மேலாளருக்கும் உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிசார் கோரிய நிலையில் அதற்கான உத்தரவினையும் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.