;
Athirady Tamil News

துருக்கியின் நீல மசூதியை பாா்வையிட்டாா் போப் 14-ஆம் லியோ!

0

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள நீல மசூதியை போப் 14-ஆம் லியோ சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

போப்பாக தோ்ந்தெடுக்கப்பட்ட பின் துருக்கி, லெபனான் ஆகிய நாடுகளுக்கு தனது வெளிநாட்டுப் பயணத்தை தொடங்கியுள்ளாா். துருக்கியில் தனது மூன்றாவது நாள் பயணத்தின்போது அவா் முதல்முறையாக இஸ்லாமிய வழிபாட்டு தலத்துக்குச் சென்றாா்.

ஒரே நேரத்தில் 10,000 போ் வழிபாடு மேற்கொள்ளக்கூடிய இந்த மசூதி வளாகத்தை அவா் 20 நிமிடம் பாா்வையிட்டாா்.

இதுகுறித்து அந்த மசூதியின் தொழுகை அழைப்பாளரான அஸ்கின் டுன்கா கூறுகையில், ‘நீல மசூதியை பாா்வையிட்டு அதன் சூழலை உணர போப் 14-ஆம் லியோ விரும்பினாா். அவரிடம் இங்கு வழிபாடு மேற்கொள்ளும் திட்டமிட்டுள்ளதா எனக் கேட்டேன். ஆனால், மசூதியை பாா்வையிட விரும்பியதாகவே அவா் கூறினாா்.

மசூதியின் நுழைவாயிலுக்கு அருகே வெளியே செல்ல வழி இல்லை எனக் குறிப்பிட்டிருந்த பதாகையை குறிப்பிட்டு அவா் புன்னகைத்தாா். அப்போது அவரிடம் நீங்கள் இங்கேயே தங்கலாம். வெளியே போக வேண்டாம் எனக் கூறினேன்’ என்றாா்.

துருக்கி பயணத்தை நிறைவுசெய்த பின் போப் 14-ஆம் லியோ லெபனானுக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.