;
Athirady Tamil News

தலாய் லாமாவுக்கு கிராமி விருது: சீனா கடும் ஆட்சேபனை!

0

தலாய் லாமாவுக்கு கிராமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருப்பதற்கு சீன அரசு கடும் ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ளது.

புத்த மதத்தின் தலைமைப் பதவிகளுள் முக்கியமான தலாய் லாமாவாகவிருக்கும் ‘டென்ஸின் க்யாட்சோ (90)’ மீது சீனா தொடர்ந்து அதிருப்தி போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.

இந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் மாநகரில் விமரிசையாக நடைபெற்ற 68-ஆவது கிராமி விருதளிப்பு விழாவில், த்லாய் லாமாவின் ஆன்மீகப் படைப்பான ‘மெடிடேசன்ஸ்: தி ரிஃப்லெக்சன்ஸ் ஆஃப் ஹிஸ் ஹோலினெஸ் தி தலாய் லாமா’ எனும் ஆன்மீக சொற்பொழிவுக்கு ‘சிறந்த ஒலி வடிவ கதைச் சொல்லும் படைப்பு’ பிரிவில் ‘கிராமி விருது’ வழங்கப்பட்டது. இதுவே, தலாய் லாமா பெறும் முதல் கிராமி விருதென்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, சீன அரசின் கருத்தை வெளிப்படுத்திய அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், “தலாய் லாமா பரிசுத்தமானதொரு ஆன்மீக நபரல்லவே. சீனாவுக்கெதிரான மதத்தின் பெயரிலான தமது பிரிவினைவாத நடவடிக்கைகளுக்காக அவர் சீனாவிலிருந்து அரசியல் ரீதியாக வெளியேற்றப்பட்டுள்ளவராவார்.

இந்த நிலையில், இத்தகையை விருதையொரு கருவியாகப் பயன்படுத்தி சீனாவுக்கெதிரான நடவடிக்கைகளை சில கட்சிகள் மேற்கொள்வதை சீனா கடுமையாக எதிர்க்கிறது” என்றார்.

இதனிடையே, தமக்கான கிராமி அங்கீகாரம் பற்றி குறிப்பிட்டுள்ள தலாய் லாமா, இவ்விருதைப் பரிவு மற்றும் மனிதாபிமானத்துடன் பெற்றுக்கொள்வதாகவும், தனியொருவனாக தனது சாதனை என்ரு இதனைக் கருத முடியாதெனவும் அவர் எளிய மனப்போக்குடன் கருத்து தெரிவித்தார். மேலும், “அமைதி, பரிவு, சுற்றுச்சூழல் மீதான அக்கறை, ஒருவரை மனிதநேயத்துடன் புரிந்துகொள்வது ஆகிய குணங்கள் அனைத்து 80 கோடி மனிதர்களின் கூட்டு நலனுக்கு அவசியமானவையாகும். கிராமி அங்கீகாரம் மூலம் மேற்கண்ட செய்தி பரவலாகச் சென்றடைய உதவும்” என்றும் குறிப்பிட்டார்.

சீனாவின் கடும் அழுத்தத்தால், கடந்த 1959களில் திபெத்திலிருந்து வெளியேறி இமாசலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் தஞ்சமடைந்த தலாய் லாமாவுக்கு, திபெத்திய விடுதலைக்காக தொடர்ந்து அமைதி வழியில் மேற்கொள்ளும் போராட்டத்துக்காக கடந்த 1989இல் ‘அமைதிக்கான நோபல் பரிசு’ வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.