;
Athirady Tamil News

பாகிஸ்தானில் ஒரே நாளில் தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள்! 11 வீரர்கள் உள்பட 14 பேர் கொலை!

0

பாகிஸ்தானில், ஒரே நாளில் நடைபெற்ற வெவ்வேறு குண்டுவெடிப்பு மற்றும் ஒரு துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் 11 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 14 பேர் கொல்லப்பட்டனர்.

கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பஜாவூர் மாவட்டத்தில், கடந்த திங்கள்கிழமை (பிப். 16) மாலை வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை ஓட்டிவந்த பயங்கரவாதி ஒருவர் அதனை அங்குள்ள மதக்கல்லூரியில் வெடிக்கச் செய்துள்ளார்.

இந்தத் தாக்குதலில், அங்கிருந்த 9 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாகவும், 10 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பன்னு நகரத்தின் மிர்யான் காவல் நிலையத்தில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் மற்றொரு வெடிகுண்டு தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டதுடன், 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதேபோல், ஷாங்கலா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளில் இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது. இதில், 3 பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் மூவரும் சீன நாட்டினருக்கு எதிராக நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் என பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, இஸ்லாமாபாத் நகரத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய மிகப் பெரிய வெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதுடன், 169 பேர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.