ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அமைய ஆட்சேர்ப்பு நடவடிக்கை ; பிரதமர் ஹரிணியின் அதிரடி திட்டங்கள்
பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளின்போது மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுடன் இணைந்து செயற்படுமாறும் நிலவும் வெற்றிடங்களுக்கு அமைய எதிர்காலத்தில் ஆசிரியர் சேவைக்கு மேலதிக ஆட்சேர்ப்புக்கள் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பெருந்தோட்டப் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலில் கல்வி உயர்கல்வி தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
முதற்கட்டமாக 23,000 ஆசிரியர்களைச் சேவைக்கு இணைத்துக்கொள்வதன் மூலம் தற்போதுள்ள ஆசிரியர் பற்றாக்குறைக்கு ஓரளவுக்குத் தீர்வு காண எதிர்பார்க்கப்படுகிறது.
பாடசாலைகளின் காணி உரிமைகளை உறுதிப்படுத்துதல் போதிய சுகாதார வசதிகள் மற்றும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த அதிகாரிகளுக்குப் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.
தரம் 13 மாணவர்கள் விஞ்ஞானம் மற்றும் கணிதத் துறைகளில் எதிர்நோக்கும் சிக்கல்கள் மற்றும் தொழிற்கல்வியின் போது நிலவும் மொழிப் பிரச்சினைகளைத் தீர்க்க விசேட கவனம் செலுத்தப்பட்டது.
பெருந்தோட்டப் பாடசாலைகள் அனைத்தும் அரச பாடசாலைகளே என்பதை வலியுறுத்திய பிரதமர் அவற்றின் பெயரிடல் மாற்றம் மற்றும் மாவட்டக் குழுக்களின் நேரடி கண்காணிப்பு குறித்து ஆலோசித்தார்.