பிள்ளைகளை கடத்துவதாகப் பரவும் வதந்திகள்: பீதியில் இந்திய நகரமொன்று
இந்திய நகரமொன்றில், பிள்ளைகள் கடத்தப்படுவதாக பரவும் வதந்திகள் பெற்றோரை பீதிக்குள்ளாக்கியுள்ளன.
பிள்ளைகளை கடத்துவதாகப் பரவும் வதந்திகள்
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள நொய்டா நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் பிள்ளைகள், குறிப்பாக பெண் பிள்ளைகள் கடத்தப்படுவதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவிவருகின்றன.
அந்த செய்திகளில் உண்மையில்லை, அவை வதந்திகள்தான் என பொலிசார் கூறினாலும், மக்கள் அதை நம்பத் தயாராக இல்லை.
பல வீடுகளில் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று அழைத்துவருவதற்காக பெண்கள் வேலைக்குப் போவதை நிறுத்திவிட்டார்கள்.
சில இடங்களில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதையே பெற்றோர் நிறுத்திவிட்டார்கள். சிலர் பயந்து பிள்ளைகளுடன் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளார்கள்.
தொண்டு நிறுவனங்கள், பிள்ளைகளின் வீடுகளுக்கே சென்று பிள்ளைகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவர முயற்சிகள் மேற்கொண்டுள்ள நிலையில், பிள்ளைகள் பள்ளியை விட்டு வெளியேறிவிட்டால் அவர்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல என பள்ளிகள் கூறுகின்றன, எப்படி நாங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது என்கிறார்கள் பெற்றோர்.
விடயம் என்னவென்றால், டெல்லியில் ஜனவரியில், சில மாணவிகள் காணாமல் போனதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பகிரப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாகவே, இப்போது நொய்டாவில் வதந்திகள் பரவ, பெற்றோர் பீதியடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.