;
Athirady Tamil News

அனுர அரசே பதில் சொல் ; யாழ் பருத்தித்துறையில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்!

0

சிறிலங்கா இராணுவத்தினாரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட, வடமராட்சி – கரவெட்டியை சேர்ந்த ஊடகவியலாளரும் ஆசிரியருமான சுப்பிரமணியம் இராமச்சந்திரன் எங்கே? அனுர அரசே பதில் சொல் என வலியுறுத்தி யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறையில் இன்று (21) பாரிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரன் வீடு திரும்பிய போது துன்னாலை கலிகை சந்தியில் அமைந்திருந்த இராணுவ முகாமில் வைத்து கடந்த 15.02.2007 அன்று சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் ஈபிடிபியினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதன் 19 ஆவது ஆண்டை முன்னிட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் நீதி கேட்டும் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் இன்று சனிக்கிழமை (21) காலை 10.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் முக்கிய செயற்பாட்டாளரும் மூத்த ஊடகவியலாளருமான மு.மதிவாணன் தலைமையில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் இராமச்சந்திரன் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் ஆற்றுகை செய்யப்பட்டிருந்தது.

இதன்போது ஊடகவியலாளர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், பி2பி மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைத் தலைவரும், சிவகுரு ஆதீன குரு முதல்வருமான தவத்திரு வேலன் சுவாமிகள், பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல், வல்வெட்டித்துறை நகரபிதா எம்.கே.சிவாஜிலிங்கம்,

கரவெட்டி பிரதேச சபை உப தவிசாளர் தி. தயாபரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன், குரலற்றவர்களின் குரல், வல்வெட்டித்துறை பிரஜைகள் குழு, பருத்தித்துறை வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புகள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.