இலங்கையில் பரீட்சை நிலையத்தில் அடிதடி ; காயத்துடன் பரீட்சை எழுதிய மாணவர்கள்
வலப்பனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்பல்கமுவ மற்றும் பன்னல பிரதேச பாடசாலைகளைச சேர்ந்த, சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 5 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (21) அழகியல் பாடத்திற்கான இடைவேளையின் போது இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து அறிந்த வலப்பனை காவல்துறையினர், உடனடியாக பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் மற்றும் பரீட்சைகள் ஆணையாளருடன் கலந்துரையாடினர்.
விசேட ஏற்பாடுகள்
இதன்போது காயமடைந்த 5 மாணவர்களும் அழகியல் பாடத்தின் இரண்டாம் பகுதி வினாத்தாளுக்குத் தோற்றுவதற்குத் தேவையான விசேட ஏற்பாடுகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மாணவர்கள் பரீட்சையை எழுதி முடித்த பின்னர், அவர்கள் மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய கும்பல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று (22) வலப்பனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதால், அவர்கள் தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்து மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.