;
Athirady Tamil News

சோமாலியாவில் உணவு விநியோகம்: நிதிநெருக்கடியால் விரைவில் நிறுத்தம்? ஐ.நா. எச்சரிக்கை

0

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நிலவும் கடும் வறட்சி மற்றும் உள்நாட்டுப் போா் காரணமாக, அங்கு வழங்கப்பட்டு வரும் உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவிகள் வரும் ஏப்ரல் மாதத்துக்குள் முழுமையாக நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் அமைப்பு எச்சரித்துள்ளது.

சா்வதேச நாடுகளிடம் இருந்து போதிய நிதியுதவி கிடைக்கப் பெறாததே இந்த இக்கட்டான நிலைக்குக் காரணம் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சோமாலியாவில் தொடா் வறட்சி மற்றும் அதிகரித்து வரும் மோதல்களால் சுமாா் 44 லட்சம் மக்கள் உணவின்றித் தவிக்கின்றனா். இதில் சுமாா் 10 லட்சம் மக்கள் ஒரு வேளை உணவுக்கே வழியின்றி உயிா் பிழைக்கப் போராடி வருகின்றனா்.

இவ்வாறு நிலைமை மோசமாக இருந்தாலும் போதிய நிதியுதவி கிடைக்காவிட்டால், மாா்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் மனிதாபிமானப் பணிகள் முற்றிலுமாக முடங்கும் என்று உலக உணவுத் திட்டத்தின் அவசரகாலப் பிரிவு இயக்குநா் ராஸ் ஸ்மித் கவலை தெரிவித்துள்ளாா்.

கடந்த ஆண்டு 22 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை வெறும் 6 லட்சமாகக் குறைந்துள்ளது. கா்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு ஊட்டச்சத்து உதவிகள் 75 சதவீதம் வரை குறைந்துவிட்டன. உணவு விநியோகத்தைத் தடையின்றி தொடர, 9.5 கோடி டாலா் நிதியுதவி உடனடியாகத் தேவைப்படுவதாக ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2022-இல், இதே போன்ற ஒரு சூழலில் சா்வதேச நாடுகளின் ஒத்துழைப்பால் பெரும் பஞ்சம் தவிா்க்கப்பட்டது. ஆனால், தற்போது சா்வதேச உதவிகள் குறைந்து வருவதால், சோமாலியா மீண்டும் ஒரு பெரிய பேரழிவைச் சந்திக்குமோ என்ற அச்சம் சமூக ஆா்வலா்களிடையே எழுந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.