;
Athirady Tamil News

யுவதியின் சடலம் மீது பாலியல் வன்கொடுமை; போராட்டத்திற்கு தடை உத்தரவு

0

நுவரெலியா டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியொருவரின் சடலத்திற்கு அவமரியாதை இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினால் முன்னெடுக்கப்படவிருந்த போராட்டத்திற்கு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று (08) ஞாயிற்றுக்கிழமை நோர்வூட் பொலிஸார் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஹட்டன் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் பி. தமேந்தி பெர்னாண்டோ இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106(01) பிரிவின் கீழ் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கிழங்கன் ஆதார வைத்தியசாலை நுழைவாயில், ஹட்டன் – நோர்வூட் பிரதான வீதி அல்லது பொதுமக்கள் கூடும் ஏனைய இடங்களில் சட்டவிரோத ஊர்வலங்கள், போராட்டங்கள் அல்லது ஒன்றுகூடல்களை நடத்துவதைத் தவிர்க்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கணபதி கனகராஜ், நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ரவி குழந்தைவேல், ஹட்டன் டிக்கோயா நகரசபையின் துணை மேயர் பெருமாள் சுரேந்திரன் ஆகியோருக்கு இந்த நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த இ.தொ.காவின் பிரதித் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்ததாவது,

ளிர் தினம் கொண்டாடப்படும் வேளையில், நாங்கள் அங்கு சென்றது போராட்டத்தை முன்னெடுப்பதற்காக அல்ல. வைத்தியசாலை பிரேத அறையில் அவமரியாதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் யுவதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே சென்றோம்.

ஆனால், நோர்வூட் பொலிஸாரும் வைத்தியசாலை நிர்வாகமும் இணைந்து நீதிமன்றத் தடையைப் பெற்று எங்களை தடுத்துள்ளனர்.

அந்த யுவதிக்கு நேர்ந்த அசம்பாவிதம் குறித்து இதுவரை உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை; குற்றவாளிகளும் கைது செய்யப்படவில்லை.” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.