;
Athirady Tamil News

எண்ணெய் விலை உயர்வால் எங்களுக்கு நிறைய பணம் கிடைக்கிறது – டிரம்ப் சர்ச்சை பதிவு

0

வாஷிங்டன் டி.சி.

மேற்காசியாவில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ள சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட சர்ச்சையான பதிவு ஒன்று வெளிவந்து உள்ளது. அதில், உலகில் அதிக அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக அமெரிக்கா உள்ளது. அதனால், எண்ணெய் விலை உயரும்போது, எங்களுக்கு நிறைய பணம் கிடைக்கிறது என டிரம்ப் தன்னுடைய சமூக வலைதள பதிவில் தெரிவித்து உள்ளார்.

ஆனால், எனக்கு அதனை விட மிக பெரிய நன்மை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த விசயம் என்னவென்றால், ஒரு ஜனாதிபதியாக, மத்திய கிழக்கை உண்மையில் உலகை அழிக்கும் அணு ஆயுதங்களை வைத்திருக்கிற, ஈரானின் தீங்கு ஏற்படுத்தும் அரசாட்சியை தடுத்து நிறுத்தியுள்ளேன் என்பதே ஆகும். அதனை ஒருபோதும் நான் நடக்க விடமாட்டேன் என்றும் பதிவிட்டு உள்ளார்.

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது.

தொடர்ந்து, ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் சூழல் காணப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளிலும் அத்தியாவசிய உபயோகத்திற்கான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

மேற்காசிய மோதலால், ஏற்கனவே கச்சா எண்ணெய் அடங்கிய பீப்பாய் ஒன்று 100 அமெரிக்க டாலர் வரை உயர்ந்து உள்ளது. இந்த சூழலில், வளைகுடா பகுதிகளில் நிறைய கப்பல்கள் தாக்கப்பட்டு வருகின்றன. ஈராக் அருகே 2 சரக்கு கப்பல்கள், ஐக்கிய அரபு அமீரகம் அருகே ஒரு கப்பல் தாக்கப்பட்டன. இதுவரை 6 கப்பல்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் தெரிய வந்துள்ளன.

இதனால், பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மொஜ்தபா காமேனி முதன்முறையாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹார்மூஸ் ஜலசந்தியை தொடர்ந்து முடக்குவோம். அந்த பகுதியை ஈரான் தன்வசம் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் என தெரிவித்தது. இந்த நிலையில், டிரம்ப்பின் பதிவு வெளியிடப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.