;
Athirady Tamil News

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!

0

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்தை ஈரான் அரசு நிராகரித்துள்ளதாக, அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களில், ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கடந்த பிப். 28 அன்று கொல்லப்பட்டார். இதையடுத்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தப் போரில், ஈரானில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன், சௌதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்தன. மேலும், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் படைகள் முடக்கியதால் சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஈரானுக்கும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கும் இடையிலான இந்தப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தன. இதனால், இந்தப் போர் கடந்த மார்ச் 23 அன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, ஈரான் தனது அணுசக்தி திட்டங்களைக் கைவிட வேண்டும் மற்றும் ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கக் கூடாது என்பதை உறுதிசெய்ய வேண்டும் உள்ளிட்ட 15 முக்கிய அம்சங்கள் கொண்ட அமைதித் திட்டத்தை அமெரிக்க அரசு முன்மொழிந்தது.

இந்த நிலையில், அமெரிக்கா முன்மொழிந்த அமைதித் திட்டத்தை ஈரான் நிராகரித்துள்ளதாக, ஈரானிய அரசின் தொலைக்காட்சியில் புதன்கிழமை (மார்ச் 25) அன்று செய்திகள் வெளியாகியதாகக் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி, அந்தச் செய்தியில் கூறப்பட்டதாவது:

“இந்தப் போரின் முடிவு, டிரம்ப் கற்பனை செய்யும்போது அல்ல, ஈரான் முடிவுக்குக் கொண்டுவர தீர்மானிக்கும் போதுதான் நிகழும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அமெரிக்காவின் திட்டத்தை ஈரான் நிராகரித்தது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.