;
Athirady Tamil News

இஸ்ரேல் மீது ஏவுகணை வீச்சு; முதன்முறையாக தாக்குதலை தொடங்கிய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

0

சனா

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதில், ஈரானில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். 4 வாரங்களாக நீடித்து வரும் இந்த மோதலில் ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டது. இதனால், லெபனானையும் இஸ்ரேல் தாக்கியது. இடையில் ஹமாஸ் அமைப்பும் தாக்குதலை தொடுத்தது.

இந்த சூழலுக்கு இடையே, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து அதிகரிக்கும் என்றால், நாங்கள் நேரடியாக ராணுவ மோதலில் ஈடுபட தயாராக இருக்கிறோம் என்று ஏமன் நாட்டிலுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதுபற்றி கிளர்ச்சியாளர்கள் அமைப்பின் செய்தி தொடர்பாளரான யாஹியா சரீ கூறும்போது, மேற்காசிய பகுதியில் பிராந்திய விரிவாக்க வேலைகளில் இஸ்ரேல் ஈடுபடுகிறது. கிரேட்டர் இஸ்ரேல் என்ற நோக்கங்களுடன் செயல்படுகிறது.

அமெரிக்காவும், இஸ்ரேலும் பேச்சுவார்த்தை முயற்சிகளின் வழியே மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். நியாயமற்ற, ஒடுக்கும் வகையிலான, நியாயப்படுத்த முடியாத செயல்கள் உலகளாவிய மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிப்பதுடன், உலக பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது என கூறினார்.

அதனால், மோதலை எதிர்கொள்ள முஸ்லிம் நாடுகளுக்கு விரிவான ஆதரவை வழங்க ஒரே வரிசையில் நின்று, தாக்குதல் நடத்துபவர்களுக்கு பெரிய தோல்வியை தரும் நோக்கில் செயல்படுவோம். ராணுவ தலையீட்டுக்கு தயாராக இருக்கிறோம் என்று கூறினார். இந்த சூழலில், ஏமனில் இருந்து இஸ்ரேல் நோக்கி இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதனை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் உறுதிபடுத்தி உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.