;
Athirady Tamil News

அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால் செங்கடலை முடக்குவோம்! – ஈரான் எச்சரிக்கை!

0

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால், செங்கடல் பகுதியை முழுவதுமாக முடக்குவோம் என ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் தலைமையில் இஸ்லாமாபாதில் நடைபெற்ற ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதனால், கடந்த ஏப். 13 அன்று முதல் ஈரானின் துறைமுகம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டு வருகிறது.

இந்த நிலையில், ஈரானின் வர்த்தகம் மற்றும் எண்ணெய்க் கப்பல்களை அமெரிக்க கடற்படை முடக்குவது, போர்நிறுத்தத்தை மீறியதாகக் கருதப்படும் என ஈரான் ராணுவம் புதன்கிழமை (ஏப். 15) அன்று அறிவித்துள்ளது.

இதுபற்றி, ஈரான் ராணுவத்தின் மூத்த அதிகாரி அலி அப்துல்லாஹி கூறியதாவது:

“ஈரான் ராணுவம் நாட்டின் இறையான்மையையும், நலன்களையும் பாதுகாக்கத் தீர்க்கமாகச் செயல்படும். இந்த முற்றுகைகள் தொடர்ந்தால், பாரசீக வளைகுடா, ஓமன் கடல் மற்றும் செங்கடல் பகுதிகளில் எவ்வித ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளை இஸ்லாமியக் குடியரசின் வலிமைமிக்க ஆயுதப் படைகள் அனுமதிக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன.

ஏற்கெனவே, காஸா மீதான போரைக் கண்டித்து செங்கடல் வழியாகச் சென்ற இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க கப்பல்களைக் குறிவைத்து ஈரானின் ஆதரவு பெற்ற யேமனின் ஹவுதி கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.