;
Athirady Tamil News

அமைச்சர் பிமல் தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் கூட்டம் – ஊடகவியலாளர்கள் துரத்தியடிப்பு

0

அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் செய்தி சேகரிக்க முடியாது என ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறு அரச நிகழ்வுகளில் பங்கேற்றார்.

இதனொரு அங்கமாக யாழ்ப்பாண நகர திட்டம் பற்றிய கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர், யாழ்ப்பாண மாநகர முதல்வர், துறை சார்ந்த அதிகாரிகள் பலரின் பங்கேற்புடன் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன் போது செய்தி சேகரிப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரின் ஒருங்கிணைப்பாளரால் ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் கலந்துரையாடல் ஆரம்பிக்க முன்னர் காணொளிகளைப் பதிவு செய்த நிலையில், கூட்டத்தில் ஊடகவியலாளர் இருக்க முடியாது எனவும் கலந்துரையாடல் முடிந்த பின்னர் வருமாறும் மாவட்ட செயலக ஊடகப் பிரிவு உத்தியோகத்தரால் அறிவுறுத்தப்பட்டது.

கலந்துரையாடல் தொடர்பாக அழைப்பு விடுக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் பங்கேற்றமை தொடர்பாக உத்தியோகத்தருக்கு தெளிவுபடுத்தப்பட்ட போதும் ஏனைய நிகழ்வுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது எனவும் இதில் இருக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஊடகவியலாளர்கள் கலந்துரையாடல் அறையில் இருந்து வெளியேறினர்.

மாற்றம், வெளிப்படைத்தன்மை தொடர்பாக அதிகம் வலியுறுத்தப்படும் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் ஊடகவியலாளர் இருக்க முடியாது என தெரிவிக்கப்பட்டமை ஊடகவியலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.