கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிமனை உத்தியோகத்தர்களுக்கு தொற்றா நோய் பரிசோதனை
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் ஆரோக்கியத்தைப் பேணும் நோக்கில், அவர்களுக்குரிய தொற்றா நோய் (NCD) கண்டறியும் மருத்துவ பரிசோதனைகள் பணிமனையில் இடம்பெற்றது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனையின் கீழ், பிராந்திய தொற்றாநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம்.பௌசாத் அவர்களின் வழிகாட்டலில் குறித்த மருத்துவ பரிசோதனைகள் இடம்பெற்றது.
தற்கால வாழ்க்கை முறையில் அதிகரித்துவரும் தொற்றா நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதற்கான ஆலோசனைகளை வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும். இதன் போது ஊழியர்களுக்கு பின்வரும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
* இரத்தப் பரிசோதனை: நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளைக் கண்டறிதல்.
* உடல் நிறை சுட்டி (BMI): உயரத்திற்கேற்ற உடல் எடையை உறுதிப்படுத்துதல்.
* இரத்த அழுத்தம் (Blood Pressure): உயர் இரத்த அழுத்த நிலைமைகளை அவதானித்தல்.
* கண் மற்றும் வாய் சுகாதாரப் பரிசோதனைகள்.
இந்த விசேட மருத்துவ பரிசோதனையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைகளின் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டு தங்களது மேலான சேவைகளை வழங்கினர்.
சுகாதாரத்துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஊழியர்கள், தமது பணியின் நிமித்தம் சொந்த ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ள முடியாமல் போகும் சந்தர்ப்பங்கள் அதிகமாகும். அதனைத் தவிர்த்து, ஆரோக்கியமான ஒரு பணிச் சூழலை உருவாக்கும் நோக்கில் இப்பரிசோதனை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
