ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் 8 கோடி ரூபா பரிமாற்ற சர்ச்சை ; உண்மையை வெளிக்கொணர கோரிக்கை
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நிதிப் பரிமாற்றத்தில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் பாரிய தவறு குறித்து அரசாங்கம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.
துபாய் தொடர்பான முகவர் செயற்பாடுகளுக்காக வழங்கப்பட வேண்டிய நிதி, தவறுதலாக வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளார்.
தயாசிறி ஜயசேகர வலியுறுத்தல்
சென்னை கிளை மற்றும் துபாய் செயற்பாடுகளுடன் தொடர்புடைய கொடுப்பனவுகளே தவறுதலாகப் பரிமாறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிதி அபுதாபி இஸ்லாமிய வங்கியில் உள்ள ஒரு கணக்கில் தவறுதலாக வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தயாசிறி ஜயசேகரவின் கூற்றுப்படி, சுமார் 97,450 ஐக்கிய அரபு அமீரக திர்ஹம் தவறாகப் பரிமாறப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு சுமார் 80 மில்லியன் ரூபாவுக்கும் (8 கோடி ரூபாய்) அதிகமாகும்.
இந்தத் தொகை பின்னர் வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் அந்தப் பணத்தை மீண்டும் மீட்பதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான நம்பகமான தகவல்கள் தமக்குக் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தயாசிறி ஜயசேகர, அரசாங்கம் உண்மைகளைச் சரிபார்த்து, இந்த நிதி முறைகேடு அல்லது தவறு குறித்து முறையான விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏற்கனவே நிதி நெருக்கடிகளையும் பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த புதிய முறைப்பாடு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.