;
Athirady Tamil News

கோழி மற்றும் முட்டை தொடர்பு… 31 மாகாணங்களில் டசின் கணக்கானோர் மருத்துவமனையில்

0

அமெரிக்காவில் கோழி வளர்ப்புடன் தொடர்புடைய, ஒரு வகை பாக்டீரியாவால், பல டசின் பேர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

31 மாகாணங்களில்
கோழிப்பண்ணைத் தொடர்பு கொண்ட மக்களிடையே சால்மோனெல்லா செயிண்ட்பால் நோய்த்தொற்று பரவக்கூடும் என கடந்த மாதம் CDC எச்சரிக்கை விடுத்திருந்தது.

Salmonella Saintpaul நோய்த்தொற்றுப் பரவல் தொடர்பில் முதலில் தகவல் வெளியானதும், 13 மாகாணங்களில் 34 பேர்கள் பாதிக்கப்பட்டு 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்தது.

இந்த நிலையில் வியாழக்கிழமை வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், 31 மாகாணங்களில் தற்போது 184 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 53 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் மரணமடைந்துள்ளதும் தெரிய வருகிறது.

இந்த நிலையில், வாத்துகள் வளர்க்கப்படும் பண்ணைகளுடன் தொடர்புகொண்ட நபர்களில் பாதிப்பு எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருப்பதாக CDC கூறியுள்ளது.

சால்மோனெல்லா தொற்று ஏற்பட்ட ஆறு மணி நேரம் முதல் ஆறு நாட்களுக்குள் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுப் பிடிப்பு ஏற்படுகிறது. மேலும், அறிகுறிகள் பொதுவாக நான்கு முதல் ஏழு நாட்களுக்குள் குணமாகிவிடும்.

ஆனால், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் உட்பட, அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு, இந்த பாக்டீரியாக்கள் இரத்தத்தில் பரவி, உயிருக்கே ஆபத்தான செப்சிஸ் எனும் சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.

மருத்துவர்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளைக் கொண்டு இந்தத் தொற்றுக்குச் சிகிச்சை அளிக்கின்றனர், ஆனால், பாக்டீரியாக்கள் எதிர்ப்புத்திறன் கொண்ட சந்தர்ப்பங்களில், இது சிகிச்சைக்கான வாய்ப்புகளைக் கடுமையாகக் குறைப்பதோடு, கடுமையான சிக்கல்கள் ஏற்படும் அபாயங்களையும் அதிகரிக்கிறது.

இதுவரை கென்டக்கியில் அதிகபட்சமாக 22 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து மிச்சிகனில் 21, விஸ்கான்சினில் 17, ஓஹியோவில் 15 மற்றும் இடாஹோ, இந்தியானா மற்றும் மெய்ன் ஆகிய மாகாணங்களில் தலா 10 பேர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒன்பது பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள வாஷிங்டன் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு நோயாளி சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரிய வருகிறது.

ஐந்து வயதுக்குட்பட்டவர்கள்
CDC வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், செயின்ட்பால் வகை தொற்றால் 133 பேர்களும், என்டெரிடிடிஸ் வகை தொற்றால் 32 பேர்களும், மபண்டகா வகை தொற்றால் 19 பேர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும், நோய் பாதிப்பு தொடர்பில் அறிவிக்கப்பட்ட மாகாணங்களில் மட்டுமின்றி, வேறு மாகாணங்களிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் CDC குறிப்பிட்டுள்ளது.

நோயாளிகளின் வயது ஓராண்டுக்கும் குறைவானதிலிருந்து 86 வயது வரையும், நோயாளிகளில் சுமார் கால் பகுதியினர் ஐந்து வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோழிப்பண்ணை சார்ந்த தொடர்புகளைக் கொண்டவர்கள், பறவைகள், அவற்றின் முட்டைகள் அல்லது அவை வசிக்கும் அல்லது நடமாடும் பகுதியில் உள்ள எப்பொருளையும் தொட்ட உடனேயே, சோப்பு மற்றும் நீரைக் கொண்டு தங்கள் கைகளைக் கழுவுமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், கோழிகளை முத்தமிட வேண்டாம் என்றும், அவற்றின் அருகில் சாப்பிடவோ குடிக்கவோ வேண்டாம் என்றும், பறவைகளின் அருகில் இருக்கும்போது குழந்தைகளை எப்போதும் கண்காணிக்க வேண்டும் என்றும், அதன் பிறகு அவர்கள் தங்கள் கைகளை முறையாகக் கழுவ வேண்டும் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.