;
Athirady Tamil News

கொசுக்களை ஒழிக்க 3.2 கோடி கொசுக்களின் படை! கூகுள் நிறுவனத்தின் புதுமை உத்தி!

0

கொசுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான வழிகளைப் பற்றி பல்வேறு நாடுகள் சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், 3.2 கோடி கொசுக்களை ஊருக்குள் விட கூகுள் நிறுவனம் அமெரிக்க அரசிடம் அனுமதி கோரியுள்ளது.

டெங்கு காய்ச்சல், ஜிகா வைரஸ் போன்ற பல்வேறு தொற்று நோய்கள் கொசுக்கள் மூலமே ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகிறது. இந்த நோய்களால் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், நோய்களைப் பரப்பும் கொசுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட 3.2 கொசுக்களை ஊருக்குள் விடும் திட்டத்தை கூகுள் நிறுவனத்தின் அறிவியல் ஆராய்ச்சி திட்டமான டீபக் (Debug) முன்மொழிந்துள்ளது.

இதனைச் செயல்படுத்த பெரும் நிதியைச் செலவிட கூகுள் நிறுவனம் தயாராகயிருக்கும் நிலையில், அமெரிக்க அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

கொசுக்களால் கொசுக்களை ஒழிக்க முடியுமா?

கொசுக்களால் பரவும் நோய்களின் தாக்கத்தைக் குறைப்பதற்கான சிறந்த வழிமுறைகளைக் கண்டறியும் டீபக் திட்டத்தை கடந்த 2014 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனம் தொடங்கியது.

உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், அரசு முகமைகளுடன் இணைந்து டீபக் ஆராய்ச்சி நிறுவனம் பணியாற்றி வருகின்றது.

ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ஆண் கொசுக்களுக்கு வோல்பாகியா பிபியெண்டிஸ் (Wolbachia pipientis) எனும் பாக்டீரியாவை செலுத்திப் பாதிப்புக்குள்ளாக்கப்படும். இந்த ஆண் கொசுக்கள், பெண் கொசுவுடன் இனச்சேர்க்கை கொள்ளும்போது, உருவாகும் முட்டைகள் பொரிப்பதில்லை. காலப்போக்கில் கொசுக்களின் எண்ணிக்கை குறையும்

இந்த திட்டத்தை அமெரிக்காவின் கலிஃபோர்னியா மற்றும் புளோரிடா மாகாணத்தில் கொசுக்கள் அதிக பாதிப்புள்ள பகுதிகளில் செயல்படுத்த அமெரிக்க அரசிடம் கடந்த டிசம்பர் 2025 -ல் அனுமதி கோரி கூகுள் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

முதல்கட்டமாக இந்தாண்டு 1.6 கோடி கொசுக்களையும், அடுத்தாண்டு 1.6 கோடி கொசுக்களையும் விடுவிக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

பொதுவெளியில் விடப்படும் கொசுக்களின் செயல்பாடுகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, பின்னர், படிப்படியாக பல்வேறு பகுதிகளை இத்திட்டத்தை விரிவுப்படுத்த கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தற்போது, அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் அனுமதிக்காக காத்துள்ளனர்.

கொசுக்களை ஒழித்தால் சுற்றுச்சூழலில் வேறு விதமான பிரச்னைகள் உருவாகும் என்ற கருத்துகள் முன்வைக்கப்படுவதால், முழு ஆய்வுக்குப் பிறகே இத்திட்டத்துக்கு அனுமதி வழங்கப்படும் எனத் தெரிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.