நாய்களின் வாய்களை நூலால் கட்டி சித்திரவதை ; உரிமையாளர் கைது
நீர்கொழும்பு, வெல்லவீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வளர்க்கப்படும் இரண்டு நாய்களுக்கு, அவற்றின் உரிமையாளரே கடுமையான வதைகளையும் சித்திரவதைகளையும் புரிந்து வருவதாகப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் நீர்கொழும்பு பொலிஸார் உடனடியாக அவ்வீட்டிற்குச் சென்று விசேட விசாரணைகளை முன்னெடுத்ததுடன், நாய்களின் உரிமையாளரான சந்தேகநபரை நேற்று (10) புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
மேலதிக சட்ட நடவடிக்கை
பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்ட போது, அந்த இரண்டு வளர்ப்பு நாய்களின் வாய்களும் ஒருவகை நூலினால் கட்டி வைக்கப்படிருந்தமை கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பொலிஸ் அதிகாரிகள் மிகவும் பாதுகாப்பான முறையில் அந்த நாய்களை மீட்டுத் தங்களது பொறுப்பின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.
உரிமையாளரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த அந்த இரண்டு நாய்களும் தற்சமயம் நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விலங்கு வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகநபருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.