;
Athirady Tamil News

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு – தண்டனையை உறுதி செய்த யாழ்.மேல் நீதிமன்று

0
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்து மீண்டும் உறுதிப்படுத்தியது. 
அதேவேளை உயர் நீதிமன்றினால் , வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இருவரையும் மேல் நீதிமன்று இன்றைய தினம் திங்கட்கிழமை விடுதலை செய்தது.
கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு செல்லும் வேளையில் மாணவி கடத்தப்பட்டு , கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
அது தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் 07 பேரை குற்றவாளியாக கண்ட ட்ரயல்ட் பார் தீர்ப்பாயம் அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது.
குறித்த தீர்ப்பினை எதிர்த்து 07 பேரும் உச்ச நீதிமன்றில் மேன் முறையீடு செய்ததை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் இருவரை உச்ச நீதிமன்று விடுதலை செய்ததுடன் , ஏனைய ஐவரின் மரண தண்டனையை உறுதி செய்தது.
விசாரணை காலத்திலையே மரண தண்டனை கைதி ஒருவர் சிறையில் நோய் வாய்ப்பட்டு , இறந்த நிலையில் , ஏனைய நால்வரின் தண்டனையை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்று மீண்டும் உறுதி செய்வதற்காக யாழ்ப்பாணம் அழைத்து வந்த நிலையில் , கடந்த 25ஆம் திகதி நால்வரில் ஒருவர் சிறையில் உயிர் மாய்த்துக்கொண்டார்.
அதனால் தீர்ப்பினை உறுதி செய்வதற்காக அன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்படவிருந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஐந்து குற்றவாளிகளில் இருவர் தற்போது உயிருடன் இல்லாத நிலையில் ஏனைய மூவருக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேல் நீதிமன்று வாசித்து காட்டி உறுதி செய்தது.
உச்ச நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட இருவரையும் மேல் நீதிமன்று விடுதலை செய்தது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.