ஐ.நா. ஆய்வாளர்கள் அணுசக்தி தளங்களைப் பார்வையிடத் திட்டமிடவில்லை: ஈரான்
ஈரானின் அணுசக்தி தளங்களை ஐ.நா. ஆய்வாளர்கள் பார்வையிட எந்தப் பயணமும் திட்டமிடப்படவில்லை என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போரில் அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி தளங்களை ஐ.நா. ஆய்வாளர்கள் பார்வையிட எந்தப் பயணமும் திட்டமிடப்படவில்லை என ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் தெரிவித்துள்ளார்.
ஈரான் தலைநகரான தெஹ்ரானில் செய்தியாளர்களுடன் பேசிய அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஈரானில் உள்ள அணுசக்தி தளங்களை சர்வதேச அணுசக்தி முகமையைச் சேர்ந்த ஐ.நா. ஆய்வாளர்கள் ஆய்வு செய்வதற்கான ஒப்பந்தத்தை முடிவு செய்ததாக அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்த நிலையில். அதற்கு முரணாக ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் பேசியுள்ளார்.
2025-ல் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய 12 நாள்கள் போருக்குப் பின்னர் சர்வதேச அணுசக்தி முகமை அவ்வபோது ஈரானுக்கு சென்று வந்தது. ஆனால், அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி செறிவூட்டல் மையங்களைப் பார்வையிட அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அமெரிக்க விவசாயப் பொருட்களை ஈரான் வாங்குவது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, ”விலை மற்றும் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் எதை இறக்குமதி செய்வது என்பதை ஈரான் அரசு முடிவு செய்யும்” என்று பாகாயி கூறினார்.
மேலும், “ஈரானின் நாகரிகத்தை அழித்து, வீழ்ச்சியடையச் செய்வதே இந்தப் போரின் தத்துவமும், இலக்குமாக இருந்தது. ஆனால், அதுவே இப்போது அமெரிக்க விவசாயிகளை செல்வ செழிப்பானவர்களாக மாற்ற உதவுகிறது. எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறது” என்றும் அவர் தெரிவித்தார்.