வெனிசுவேலாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! கட்டடங்கள் சேதம்!
வெனிசுவேலாவில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டதால் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
முதலில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவான நிலையில், சில நிமிடங்களில் 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
தலைநகர் கராகஸில் இருந்து 168 கிலோமீட்டர் தொலைவில் மோரோன் பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியில் இருந்து 22 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கி சேதமடைந்தன. மக்கள் அச்சம் அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். எனினும் சில நிமிடங்களில் பூமியிலிருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்கள் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளில் அந்நாட்டு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.