;
Athirady Tamil News

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் ; பின்னணியில் வெளியான பல திடுக்கிடும் உண்மைகள்

0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் நிலைமை குறித்து பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் சிறைச்சாலைத் தரப்பு பல முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

மோதலில் ஈடுபட்ட கைதிகள், சில அதிகாரிகளின் தலைகள் மீது பெரிய கற்களைப் போட்டுத் தாக்கியுள்ளதாக சிறைச்சாலைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புப் பிரிவினரின் தகவல்களின்படி, இந்த மோதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

சிறைச்சாலையினுள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் குழுவினர், அதுகுறித்த தகவல்களை அதிகாரிகளுக்கு வழங்கும் கைதிகளை இலக்கு வைத்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த மோதலை ‘கடுவெல்லேகம சுரேஷ்’ என்பவரே முழுமையாக வழிநடத்தியுள்ளார்.

இதன்போது, கொடூரமாகத் தாக்கப்பட்ட வர்ணகுலசூரிய நிலங்க துல்ஷான் (29 வயது) மற்றும் கணேவத்த ஆரச்சிலாகே கயான் சம்பத் (31 வயது) ஆகிய இரு கைதிகள் உயிரிழந்தனர்.

இவர்கள் இருவரும் சிறை அதிகாரிகளுக்கு ஒற்றர்களாகச் செயற்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது. பின்னர் பாதுகாப்புப் பிரிவினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து கைதிகளை வார்டுகளுக்குள் அடைத்திருந்தனர்.

அந்த இடைவெளியில், கைதிகள் சிறைச்சாலை வைத்தியசாலையை உடைத்து, மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் அனைத்தையும் கொள்ளையடித்துள்ளனர்.

நிலைமை சீரடைந்ததைத் தொடர்ந்து, மறுநாள் (நேற்று) காலை அதிகாரிகளால் கைதிகளுக்கு உணவு வழங்கப்பட்டபோது, சுரேஷின் தரப்பைச் சேர்ந்த ஒருவர், ஒற்றர் தரப்பைச் சேர்ந்த ஒருவரின் கன்னத்தில் அறைந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, சுமார் 100 கைதிகள் ஒன்றுசேர்ந்து அந்த நபரைச் சூழ்ந்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

இரண்டு சிறை அதிகாரிகள் அந்த கைதியைக் காப்பாற்றி சிறைச்சாலையிலுள்ள விகாரைப் பகுதிக்கு அழைத்துச் சென்றபோது, தாக்குதல் நடத்திய கைதிகள் அதிகாரிகள் மீதும் கற்களால் எறிந்துள்ளனர்.

இதற்கிடையில் இரு தரப்பு கைதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் மூண்டது.

நிலைமையைக் கட்டுப்படுத்த வந்த பல்லன்சேன சிறைச்சாலையின் புதிய பிரதம ஜெயிலர் மீதும் கைதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பின்னர், முதலில் தாக்கப்பட்ட கைதியை அழைத்துச் சென்ற இரண்டு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து, சம்பந்தப்பட்ட அதிகாரியைக் காப்பாற்றினர்.

அவரை வெளியேறும் வழியில் இழுத்துச் சென்றபோது, ​​ஒரு கைதி வந்து முள் போன்ற ஒன்றைக் கொண்டு அந்த இரண்டு அதிகாரிகளில் ஒருவரைத் தாக்க முயன்றார், ஆனால் அது பயனற்றுப் போனது.இது சிறை வளாகத்தில் நடந்திருந்தது.

“சார், இங்கே வராதீர்கள். போய்விடுங்கள்.” சிறை அதிகாரிகளுடன் நட்பாக இருந்த கைதிகள் அவர்களை அந்த இடத்திலிருந்து அகற்ற முயன்றனர், ஆனால் மற்றொரு கைதிகள் குழுவும் அவர்களைத் தாக்கியது.

அதன் பின்னர், சிறைச்சாலையின் விரைவு அதிரடிப்படையினர் உள்ளே நுழைந்தபோது, கைதிகள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு கொடூரமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

சில அதிகாரிகளின் தலைகளில் பெரிய கற்களை போட்டு தாக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சிறைச்சாலையின் பாதுகாப்பு அறை மற்றும் ஆயுதக் களஞ்சிய அறையை உடைத்த கைதிகள், அங்கிருந்த ரீபீட்டர் (Repeater) ரக துப்பாக்கி ஒன்றையும், டி-56 (T-56) ரக துப்பாக்கி ஒன்றையும் கைப்பற்றி, அதிகாரிகள் மீதும் எதிர்த்தரப்புக் கைதிகள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

பின்னர் இந்த இரு துப்பாக்கிகளும் பாதுகாப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டன.

கைதிகள் சிறைச்சாலையின் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் அத்தியட்சகரின் உத்தியோகபூர்வ அறையின் கழிவறையைக்கூட அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தியுள்ளனர். இந்தச் சேத விபரங்கள் இதுவரை மதிப்பிடப்படவில்லை.

இந்த மோதலில் காயமடைந்து நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு கைதி இன்று காலை உயிரிழந்ததை அடுத்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்த 1,033 கைதிகள் பாதுகாப்புக் கருதி அனுராதபுரம், பூஸா, மஹர, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அங்குணகொலபெலஸ்ஸ மற்றும் போகம்பரை ஆகிய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மோதலை வழிநடத்திய கடுவெல்லேகம சுரேஷ் பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில், நீர்கொழும்பு சிறையில் நடந்த சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவால் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நீர்கொழும்பு சிறைச்சாலைச் சூழலில் அமைதியான நிலைமை காணப்பட்டாலும், கைதிகளின் விபரங்களை அறிய அவர்களின் உறவினர்கள் சிறைச்சாலைக்கு அருகில் கூடிப் பதற்றமாக நடந்துகொண்டனர்.

இடமாற்றப்பட்ட கைதிகள் மற்றும் வைத்தியசாலையில் உள்ளவர்களின் பெயர்ப்பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனைகள் இன்று காலை ஆரம்பமாகின.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் கொழும்பு குற்றவியல் (CCD) பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சிஐடி அதிகாரிகள் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முதற்கட்ட விபரங்களை சமர்ப்பித்து, சாட்சியாளர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஸங்க கரவிட்ட இன்று சிறைச்சாலைக்கு நேரில் சென்று விசாரணைகளைக் கண்காணித்தார்.

இவற்றுக்கு மேலதிகமாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணையை ஆரம்பித்துள்ளதாக அதன் ஆணையாளர் நிமால் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.