;
Athirady Tamil News

சீனாவில் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி – தொடரும் மீட்புப் பணிகள்

0

பீஜிங்,

சீனாவை தாக்கிய சூறாவளி மற்றும் நிலச்சரிவுக்கு 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

பயங்கர நிலச்சரிவு
ஆசியாவின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளில் ஒன்றான சீனாவில் திடீரென மாறிய வானிலை ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெரும் விபரீதத்தைக் கொண்டு வந்துள்ளது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை, பயங்கர நிலச்சரிவு மற்றும் கோரமான சூறாவளி காற்று ஆகியவை ஒட்டு மொத்த சீனாவையே நிலைகுலையச் செய்துள்ளன.

சீனாவின் வடமேற்குப் பகுதியான கன்சு மாகாணத்தில் உள்ள லோங்னான் என்ற கிராமத்தில் நேற்று அதிகாலை மக்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகள் இடிந்து விழுந்ததில் மொத்தம் 33 பேர் மண்ணோடு மண்ணாகப் புதையுண்டனர்.

தொடரும் மீட்புப்பணிகள்
உடனடியாக விரைந்து வந்த மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்குள் இருந்து 21 பேரை மீட்டனர். எனினும், ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள 12 பேரை மீட்க தற்போதும் மீட்புக் குழு தீவிரமாகப் போராடி வருகிறது.

இதற்கிடையே, ஹூபெய் மாகாணத்தை தாக்கிய பயங்கர சூறாவளி, இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுக்கு 11 பேர் பலியாகியுள்ளனர். ஒருவர் காணாமல் போயுள்ளார். இந்த சூறாவளியால் 4 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

அதேபோல், ‘மேசக்’ புயல் காரணமாக மற்றொரு பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

சீன அதிபர் ஜின்பிங்
ஒட்டுமொத்தமாக சீனாவில் 20 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். “மக்களின் உயிரையும் உடைமைகளையும் காக்கப் போர்க்கால அடிப்படையில் அவசர மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிடுங்கள்” என்று சீன அதிபர் ஜின்பிங் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதால் அங்கு உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.

இதனிடையே சீனாவில் வெள்ளம் சூழ்ந்த பண்ணை ஒன்றிலிருந்து சுமார் 900 பாம்புகள் தப்பிச் சென்றதால் அப்பகுதியில் பாம்புகளால் அச்சம் நிலவும் அசாதாரண சூழலும் ஏற்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.