ஹார்மூஸ் ஜலசந்தியில் ஏவுகணை தாக்குதலில் தீப்பற்றிய கப்பல்; ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்பு
லண்டன்
ஹார்மூஸ் ஜலசந்தியில் ஏவுகணை தாக்குதலில் தீப்பற்றிய கப்பலில் இருந்து ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர்.
அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதலால், உலகில் சரக்கு கப்பல் போக்குவரத்து அதிகம் நடைபெறும் ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலை காணப்படுகிறது. இந்த பகுதியை கடந்து செல்லும் கப்பல்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த நிலையில், ஹார்மூஸ் ஜலசந்தியில் சென்ற கப்பல் மீது இன்று ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது. இதில் சிக்கி தீப்பற்றி எரிந்த கப்பலில் இருந்து ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர்.
இங்கிலாந்து கடல்சார் வர்த்தக செயல்பாடுகளுக்கான அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ஓமன் நாட்டில் இருந்து 15 கி.மீ. வடமேற்கே உள்ள கும்ஜார் நகரில், இந்த ஏவுகணை தாக்குதல் நடந்தது. இதனை தொடர்ந்து உஷாரான கப்பல் ஊழியர்கள் உடனடியாக கப்பலை விட்டு விட்டு வெளியேறினர். அவர்கள் பாதுகாப்பாக மீட்பு படகின் உதவியுடன் மீட்கப்பட்டனர் என தெரிவித்து உள்ளது.
அதிகாரிகள் விசாரணை
தீயானது இன்னும் அணைக்கப்படவில்லை. கப்பல் ஆட்கள் யாருமின்றி தொடர்ந்து மிதந்து கொண்டு இருக்கிறது என்றும் தெரிவித்து இருக்கிறது. இந்த சம்பவம் பற்றி எங்களுடைய அதிகாரிகள் விசாரித்து வரும் சூழலில், இந்த பகுதி வழியே செல்ல கூடிய கப்பல்கள் அனைத்தும் எச்சரிக்கையுடன் செல்லும்படி அறிவுறுத்தல் அளிக்கப்பட்டு உள்ளது.
சந்தேகத்திற்குரிய வகையிலான எந்த செயல்பாடும் தென்பட்டால், அதுபற்றி எங்களிடம் தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது என அறிக்கை தெரிவிக்கின்றது.