பள்ளிவாசல் அருகே போதைப்பொருள் விற்பனை: எதிராளிகள் இருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை
பள்ளிவாசல் அருகே போதைப்பொருள் விற்பனை: எதிராளிகள் இருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை
சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு
பாறுக் ஷிஹான்
நிந்தவூர் கடற்கரை பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசல் அருகே போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டமை மற்றும் மதஸ்தலத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளுக்காக இரு எதிராளிகளுக்குத் தலா 1,500 ரூபாய் தண்டப் பணமும், 5 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதித்து சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாகக் குறித்த பகுதியில் இடம்பெற்று வந்த போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை போன்ற சமூக விரோதச் செயற்பாடுகளைத் தடுக்கும் நோக்கில், பள்ளிவாசல் நிருவாகமும் பேஷ் இமாமும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர்.
இருப்பினும், இச்சீர்திருத்த நடவடிக்கைகளைப் பொருட்படுத்தாத போதை வியாபாரிகள், பள்ளிவாசல் நிருவாகத்தினர் மற்றும் இமாமுடன் தொடர்ச்சியாக வீண் சச்சரவுகளில் ஈடுபட்டு வந்தனர்.
தொழுது கொண்டிருந்தபோது பட்டாசு வெடித்து வீண் சச்சரவு
இதன் உச்சக்கட்டமாக, கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் திகதி பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசலில் இஷா தொழுகை இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், போதைப்பொருள் விற்பனைக் கும்பலினால் பள்ளிவாசல் வளாகத்திற்குள் பட்டாசு கொளுத்தி எறியப்பட்டுப் பரபரப்பு ஏற்படுத்தப்பட்டது.
தொழுகை முடிந்து வெளியே வந்த மஹல்லாவாசிகளிடம் நடுவீதியில் கை கலப்பில் ஈடுபடும் வகையில் அக்கும்பல் நடந்துகொண்டது.
இதனைத் தொடர்ந்து, பள்ளிவாசல் பேஷ் இமாம் மற்றும் நிருவாக சபையினர் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததை அடுத்து, சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
சுமார் மூன்று வருடங்களாக இடம்பெற்று வந்த இவ்வழக்கு விசாரணைகளின் முடிவில், கெளரவ நீதவான் அவர்களால் குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வரலாற்றுப் போராட்டம்
இவ்வழக்கில் பள்ளிவாசல் சார்பில் வழக்குத் தொடுனர்களாக ஏ. அஸீஸ், ஏ. றமுழான், பிர்தெளஸ் பள்ளிவாசல் தலைவர் எம்.எம். பஷீர் மற்றும் பேஷ் இமாம் அல்ஹாபிழ் மௌலவி ஏ.பீ.எம். ஷிம்லி ஆகியோர் இறுதிவரை களத்தில் நின்று போராடியுள்ளனர்.
நிந்தவூரிலுள்ள ஜும்ஆ பள்ளிவாசல் ஒன்று போதைப்பொருளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து வெற்றிகண்டுள்ளது இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்காலச் செயற்திட்டங்கள்
இளம் சந்ததியினரைப் பாதுகாக்கும் நோக்கில் போதைப்பொருள் பாவனையாளர்களைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்துதல்.பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மாணவர்களை நல்வழிப்படுத்துதல்.இரவில் போதைப்பொருளுக்காக வரும் இளைஞர்களை அடையாளம் கண்டு பொலிஸாரிடம் ஒப்படைத்தல்.
மாணவர்களின் கல்விக்காகப் பள்ளிவாசலை மையப்படுத்தி சுய கற்றல் நிலையம் (Self-study center) அமைத்தல்.பள்ளிவாசல் ஊடாக விரைவில் பின்வரும் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது:
